சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள், இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவின் பெரிய மசூதிக்கு அருகில் ஒரு பெரிய புதிய மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளார். “கிங் சல்மான் கேட்” என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்டமான திட்டம், அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களை தங்க வைக்க உதவும் வகையில், உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் சுமார் 900,000 புதிய பிரார்த்தனை இடங்களை சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதற்கு எவ்வளவு செலவாகும் அல்லது எப்போது நிறைவடையும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுமார் 12 மில்லியன் சதுர மீட்டர் (சுமார் 4.6 சதுர மைல்கள்) பரப்பளவை உள்ளடக்கிய இந்த திட்டம், சாலைகளை மேம்படுத்துவதன் மூலமும், அந்தப் பகுதியை பொதுப் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைப்பதன் மூலமும் கிராண்ட் மசூதிக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன நகர்ப்புற திட்டமிடலின் சிறந்த இடமாக மக்காவை மாற்றுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத வசதிகளுடன் கூடுதலாக, கிங் சல்மான் கேட் திட்டமானது வீடுகள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் கலாச்சார இடங்களை உள்ளடக்கும், இது பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட இடமாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 19,000 சதுர மீட்டர் வரலாற்று தளங்களை மீட்டெடுப்பதன் மூலம் நகரத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி, 2036 ஆம் ஆண்டுக்குள் 300,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மேம்பாடு நாட்டின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நீண்டகால திட்டமான சவூதி தொலைநோக்கு 2030 இன் முக்கிய பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel