துபாய், ஷார்ஜா இடையே இரு இன்டெர்சிட்டி பேருந்து வழித்தடங்களை மீண்டும் தொடங்கவுள்ள RTA ..!! ஞாயிறு முதல் சேவை தொடங்கும் என அறிவிப்பு..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), சார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் ஒருங்கிணைந்து, வரும் டிசம்பர் 27 முதல் துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு இடையில் இரண்டு இன்டர்சிட்டி பஸ் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
Route E306
இந்த வழித்தடத்தில் உள்ள பேருந்துகள் துபாயின் அல் குபைபா பஸ் டிப்போவிலிருந்து (Al Ghubaiba Bus Station) பயணத்தைத் தொடங்கி ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பேருந்து நிலையத்தை (Al Jubail Bus Station) அல் மம்சார் (Al Mamzar) பாதை வழியாக சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிப்பாதையில் ஆறு டபுள் டெக்கெர் பேருந்துகள் (Double-Decker Bus) சேவையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Route E307
இந்த வழித்தடத்தில் உள்ள பேருந்துகள் துபாயின் தேரா சிட்டி சென்டர் பேருந்து நிலையத்திலிருந்து (Deira City Centre Bus Station) தொடங்கி அல் இத்திஹாட் சாலை (Al Ittihad Road) வழியாக ஷார்ஜாவின் அல் ஜுபைல் பேருந்து நிலையத்திற்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்திற்கும் ஆறு டபுள் டெக்கெர் பேருந்துகள் சேவையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இரு வழித்தடங்களின் ஒவ்வொரு வழித்தடத்திலும் தினமும் சுமார் 1,500 பயணிகள் பயணம் செய்வார்கள் என்று கூறப்படுகின்றது.
அத்துடன் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி RTA, மற்ற இரண்டு இன்டர்சிட்டி பஸ் வழித்தடங்களை மாற்றியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூட் E307A மற்றும் ரூட் E400 அல் இத்திஹாட் சாலைக்கு பதிலாக அல் மம்சார் வழியாக செல்லும் என்று RTA அறிவித்துள்ளது.
மேலும், துபாய் மற்றும் இன்டர்சிட்டி பஸ் சேவைகளில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் RTA கேட்டுக்கொண்டுள்ளது.