அபுதாபி இந்த வாரம் தனது பொழுதுபோக்கு அம்சங்களின் வரிசையில் ஒரு புதிய அம்சத்தை சேர்க்கவுள்ளது, ஆம், ‘The Butterfly Gardens Abu Dhabi’ ஜனவரி 9 அன்று அல் கானாவில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அபுதாபியின் பிரபலமான ஷேக் சையத் கிராண்ட் மசூதியிலிருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த மையம், பார்வையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் சிறந்த அனுபவத்தை வழங்கம் என்று கூறப்பட்டுள்ளது.
முழுவதும் உள்ளரங்கில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில், தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பயோடோம்களில் (biodome) 10,000-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள், அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வெப்பமண்டல விலங்குகள் மற்றும் அரியவகை மழைக்காட்டு உயிரினங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் கானா வாக் பகுதியில் அமைந்துள்ள இந்த ஈர்ப்பு மையம், ஷேக் சையத் கிராண்ட் மசூதியிலிருந்து சுமார் ஐந்து நிமிட பயண தூரத்தில் உள்ளது மற்றும் ‘ The National Aquarium’-க்கு எதிரே அமைந்துள்ளது.
நடந்து சென்று பார்க்கும் அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காக்கள், பார்வையாளர்களை அழகுபடுத்தப்பட்ட பாதைகளில் உலாவவும், மீண்டும் உருவாக்கப்பட்ட வெப்பமண்டல வாழ்விடங்களில் பட்டாம்பூச்சிகளைக் காணவும் அனுமதிக்கின்றன என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, இந்த பயோடோம்கள் ஆசியா மற்றும் அமெரிக்காவின் இயற்கை சூழல்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இவற்றில் பசுமையான உள்ளரங்க தாவரங்கள் மற்றும் கோய் மீன் குளங்கள் (koi pond) இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட்டாம்பூச்சிகளைத் தவிர, இந்த ஈர்ப்பு மையம் இரண்டு கால் சோம்பல் கரடி (two-toed sloth) பலவான் கரடிப் பூனை (Palawan bearcat), தமண்டுவா (tamandua), இலங்கை ராட்சத அணில் (Sri Lankan giant squirrel) மற்றும் குவியரின் குள்ள கெய்மன் (Cuvier’s dwarf caiman) போன்ற பல விலங்கு இனங்களையும், அத்துடன் ஃபின்ச் (finches) மற்றும் கூல்டியன் ஃபின்ச் (Gouldian finches) போன்ற பல்வேறு பறவைகளையும் காட்சிப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செயல்படும் நேரம்
இது குறித்து வெளியான தகவல்களின் படி, பட்டாம்பூச்சிப் பூங்காக்கள் வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். டிக்கெட்டின் விலை 55 திர்ஹம் ஆகும், அதே சமயம் ‘தி நேஷனல் அக்வேரியம்’-உடன் இணைந்த டிக்கெட் 150 திர்ஹாம்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், முழுவதும் உள்ளரங்கில் அமைந்துள்ள வசதி என்பதால், இந்த பூங்காக்கள் ஆண்டு முழுவதும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பமான கோடை மாதங்களில் கூட பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை இது வழங்கும்.
மேலும், இந்தத் கார்டன்களில் காட்சிப்படுத்தப்படும் பட்டாம்பூச்சிகள் கோஸ்டாரிகா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள பாதுகாப்பு சார்ந்த இனப்பெருக்கத் திட்டங்கள் மூலம், சிறிய அளவிலான விவசாய சமூகங்களுடன் இணைந்து பெறப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஈர்ப்பு மையத்தின் நெறிமுறைக்குட்பட்ட ஆதார மாதிரியின் கீழ், மகரந்தச் சேர்க்கையை ஆதரிக்கவும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், பட்டாம்பூச்சிகளின் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவற்றின் சொந்த வாழ்விடங்களில் மீண்டும் விடுவிக்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஈர்ப்பு மையத்தின் பொது மேலாளர் பால் ஹாமில்டன் கூறுகையில், இந்தத் திட்டமானது முற்றிலும் உள்ளரங்க சூழலில், இயற்கையால் ஈர்க்கப்பட்ட ஒரு ஆழ்ந்த அனுபவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel