ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக இரு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து, இது வரை பல்லாயிரக்கணக்கானோர் தடுப்பூசியினைப் பெற்று வருகின்றனர். இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொள்வதற்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளையும் அமீரக அரசு அறிவித்திருந்தது. கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் போன்ற சில குறிப்பிட்ட நபர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைகளில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது அமீரக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கான வயது வரம்பை குறைத்துள்ளது. இனி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆர்வத்திற்கு ஏற்ப சமீபத்திய அறிவிப்பு இருப்பதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக மருத்துவ தகுதி வாய்ந்த குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறிப்பிட்ட பிரிவில் 100 பேருக்கு 25.12 அளவுகளில் தடுப்பூசி விநியோக விகிதத்தை ஐக்கிய அரபு அமீரகம் அடைந்துள்ளது. இதுவரை அமீரகத்தில் 1.88 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.