ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே காலை நேரங்களில் மூடுபனி நிலவி வருகின்றது. இந்த மூடு பனியின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவுநிலை (visibility) மிகக் குறைவாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை அபுதாபியில் நிலவிய கடுமையான மூடுபனி காரணமாக 19 வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் இன்று காலை நிலவிய கடுமையான மூடுபனியினால் தெரிவுநிலை மிகக் குறைந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.
பல வாகனங்கள் மோதிய இந்த விபத்தில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. மேலும் அல் மஃப்ராக் (Al Mafraq) செல்லும் சாலையில் மகதாரா பகுதியில்(Maqatara area) இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, சாலை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தாததாலும், மூடுபனி வாகன ஓட்டிகளுக்கு தெரிவுநிலையைக் குறைத்தபோதும் அவர்கள் மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கத் தவறியதாலும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த நபர் ஆசியாவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மற்றவர்கள் லேசானது முதல் மிதமானது வரையிலான காயம் அடைந்துள்ளனர்.
பனிமூட்டத்தின் போது வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சாலையில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, பொருந்தக்கூடிய வேக வரம்புகளை கடைபிடிக்க அவர்கள் போக்குவரத்து புதுப்பிப்புகளையும், அறிவுறுத்தப்பட்டிருக்கும் வேக வரம்பிலும், சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்படும் போக்குவரத்து குறித்த எச்சரிக்கை செய்திகளையும் கவனத்தில் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பனிமூட்டத்தின் போது வாகனத்தின் வேக வரம்பானது மணிக்கு 80 கிலோமீட்டராக குறைக்கப்படுவதாகவும், இது SMS மற்றும் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக்கு குறித்த செய்திகளை அறிவிக்கும் பல்வேறு மெசேஜ் ரோட் சைன் (message road signs) மூலம் வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் நிலைமைகளை சரிபார்த்துக்கொள்ளவும், சுற்றியுள்ள வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.