ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குடியிருப்பாளர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அமீரக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசால் புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறைகள் பல்வேறு துறைகளில் பணிபுரியும் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து கோவிட் -19 தடுப்பூசிகளின் இரண்டு டோசினையும் பெற்றவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அமீரக அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கோவிட் பரிசோதனைகள்…
அமீரக மனிதவள அமைச்சகத்தின் (FAHR) கூற்றுப்படி, அனைத்து அமைச்சகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை கொரோனாவிற்கான PCR சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது ஜனவரி 24 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான கட்டணத்தை ஊழியர்கள் தங்களின் சொந்த செலவில் செலுத்த வேண்டும் என்றும் மேலும் ஒரு ஊழியர் தடுப்பூசி எடுக்க முடியாத மருத்துவ நிலைமை உடையவர்களாக இருந்தால், ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வதற்கான செலவை அவர்களின் நிறுவனமே செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது.
வெளிப்புற மற்றும் பொது சேவை நிறுவன ஊழியர்கள்…
மத்திய அரசு நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிப்புற மற்றும் பொது சேவை நிறுவனங்கள் (Outsourced and public services companies) தங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒரு PCR பரிசோதனையை நடத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் முழுநேர அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு இது கட்டாயமாகும்.
ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள்…
அரசால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அல்லது அரசாங்க அலுவலகங்களில் கலந்து கொள்ள வேண்டிய ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் மூன்று நாட்களுக்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கு எதிர்மறையான PCR முடிவைக் கொண்டிருக்க வேண்டும்.
மருத்துவமனையில் உள்நோயாளியை காண வருவதற்கு…
அபுதாபி மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் (inpatients) பிரிவிற்கு வருகை புரியும் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான எதிர்மறை PCR முடிவை வைத்திருக்க வேண்டும்.
பிற பகுதிகளிலிருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு…
கொரோனாவிற்கான PCR / DPI சோதனை முடிவில் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்கள் அபுதாபிக்குள் நுழையலாம். அவ்வாறு நுழைபவர்களில் தொடர்ந்து தங்குபவர்களுக்கு நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாளில் PCR சோதனை தேவை.
ஷார்ஜாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு…
ஷார்ஜாவின் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு கோவிட் -19 PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.