ADVERTISEMENT

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு வான்வெளி, நிலம், கடல் வழிகளை பயன்படுத்த அனுமதி இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட அமீரகம்..!!!

Published: 27 Jan 2026, 7:36 AM |
Updated: 27 Jan 2026, 7:42 AM |
Posted By: Menaka

சமீப காலங்களாகவே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் அதன் வான்வெளி, நிலம் அல்லது கடல்வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம ஜனவரி 26, திங்கள் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமீரகம் எந்தவொரு தாக்குதலுக்கும் ஆதரவை வழங்காது என்று தெரிவித்துள்ளது. மேலும், சர்ச்சைகள் இராணுவ ரீதியாக அதிகரிப்பதற்குப் பதிலாக உரையாடல், மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையை மதிப்பது போன்றவற்றின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அமீரகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்டை நாடான சவுதி அரேபியாவும் கடந்த வாரம் இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது, ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலிலும் அதன் பிரதேசம் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது ஈரான் தொடர்ந்து ஒடுக்குமுறையை மேற்கொண்டால், ஒரு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதிகரித்து வரும் பதட்டங்களால் பாதிக்கப்பட்ட விமானங்கள்

இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சில விமான நிறுவனங்கள் இப்பகுதிக்குச் செல்லும் வழித்தடங்களில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.

பிராந்திய பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி, துபாய்க்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதேபோல், டச்சு விமான நிறுவனமான KLM துபாய், டெல் அவிவ், தம்மம் மற்றும் ரியாத் உள்ளிட்ட இடங்களுக்கான சேவைகளை நிறுத்தியது, மேலும் ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் மீது பறப்பதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்தது.

ADVERTISEMENT

இதற்கிடையில், இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் ஜனவரி 26 முதல் 28 வரை திபிலிசி, அல்மாட்டி, தாஷ்கண்ட் மற்றும் பாகு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது, மேலும், பயணிகள் இப்பகுதியில் உள்ள சமீபத்திய நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் பதட்டங்கள் சிறிது தணிந்ததாகத் தோன்றினாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவ ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: “எங்களிடம் நிறைய கப்பல்கள் அந்த திசையில் சென்று கொண்டிருக்கின்றன, ஒருவேளை தேவைப்பட்டால்… ஈரானை நோக்கி ஒரு பெரிய படை சென்று கொண்டிருக்கிறது” என்று எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு தாக்குதலும் ஒரு முழுமையான போராகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், நாடு உயர் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மோசமான சூழ்நிலைக்கு தயாராகி வருவதாகவும் கூறியுள்ளது.

இந்த மோதலில் அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் புவிசார் பதட்டங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel