அமீரகத்தில் இந்த போக்குவரத்து விதியினை மீறினால் 2,000 திர்ஹம் அபராதம்.. 12 பிளாக் பாயிண்ட்ஸ்..!! காவல்துறையினர் எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சில வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அதிக சப்தத்துடன் வாகனத்தை ஓட்டுகின்றனர். இவ்வாறு வாகனம் ஓட்டும்பொழுது அதற்கருகில் உள்ள பொதுமக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அபுதாபி காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் வாகனத்தின் எஞ்சினில் எவ்வித மாற்றங்களையும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு செய்யும் போது வாகனமானது அதிக இரைச்சலை உருவாக்கும் மற்றும் பிற சாலை பயனர்களை எரிச்சலடையச் செய்யும் என்பதால் எஞ்சினில் எவ்வித மாற்றங்களையும் வாகன ஓட்டிகள் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு விழிப்புணர்வு செய்தியில், வாகனத்திடம் இருந்து வெளிவரும் இந்த அதிகளவு சத்தமானது மற்ற ஓட்டுநர்கள், சாலை பயன்படுத்துபவர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் ரேடார்கள் 95 டெசிபல்களைத் தாண்டி ஒலியை உருவாக்கும் வாகனத்தின் பிளேட் எண்ணை கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நகராட்சி நிர்ணயித்தபடி கட்டுமானப் பணிகளுக்கான இரைச்சல் வரம்பு 55 டெசிபல் ஆகும், அதே நேரத்தில் சராசரியாக பறவையின் ஒலியானது 44 டெசிபல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அபுதாபியில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ரேடார் சாதனம் வீடியோ மற்றும் ஆடியோவுடன் அதிக இரைச்சலை உருவாக்கி சாலையைக் கடந்து செல்லும் வாகனங்களை கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வித விதிமீறலுக்கு எதிராக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றனர். ஷார்ஜாவில், கடந்த 2018 ஆம் ஆண்டில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய 935 வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின் 20 வது பிரிவின்படி, 95 டெசிபல்களைத் தாண்டி சப்தத்தை ஏற்படுத்தக்கூடிய வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 பிளாக் பாயிண்ட்ஸ் (black points) வழங்கப்படும் என்று காவல்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக சப்தத்தை ஏற்படுத்தும் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
அபுதாபி – 999
துபாய் – 901
ஷார்ஜா – 800151
அஜ்மான் – 999
ராஸ் அல் கைமா – 8002626
ஃபுஜைரா – 999
உம் அல் குவைன் – 999
அதே போன்று, சட்டத்தை பின்பற்றாமல் ஒரு வாகனத்தின் என்ஜினை மாற்றியமைக்கும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் அத்துடன் 12 போக்குவரத்து பிளாக் பாயிண்ட்ஸ் அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#أخبارنا | #شرطة_أبوظبي 2000 درهم مخالفة قيادة مركبة تسبب ضجيج#أخبار_شرطة_أبوظبيhttps://t.co/F75ydn1JxA pic.twitter.com/2WgP9uVbFw
— شرطة أبوظبي (@ADPoliceHQ) January 20, 2021