துபாயில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையான ஷேக் சையத் சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தைத் தொடர்ந்து ஒரு வாகன ஓட்டி தனது வாகனத்தை விட்டு இறங்கிய போது பின்னால் வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக துபாய் காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் அல் யலாயிஸ் பாலம் முன் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இது பற்றி துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா பின் சுவைதான் அவர்கள் பேசுகையில், இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கி எக்ஸ்பிரஸ் பாதைக்கு அடுத்துள்ள இடது சாலை ஓரத்தில் (road shoulder) நின்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று விவரித்துள்ளார், எமிரேட்டின் சாலைகளில் அவசரகால சூழ்நிலைகளைத் தவிர வேறு நேரங்களில் காரை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மோதலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய ஓட்டுநர்களில் ஒருவர் தனது வாகனத்திலிருந்து இறங்கியதாகவும், அந்த நேரத்தில், பின்னால் வந்த மற்றொரு வாகனம் அவர் மீது மோதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, வாகனத்தின் வேகம் மற்றும் குறுகிய தூரம் காரணமாக, ஓட்டுநர் அந்த நபரைத் தவிர்க்க முடியவில்லை, கார் மோதிய வேகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.
அதிக வேகம் மற்றும் பாதுகாப்பான பின்தொடர்தல் தூரத்தை பராமரிக்கத் தவறியது சம்பவத்தின் தீவிரத்திற்கு பங்களித்ததாக பிரிகேடியர் பின் சுவைடன் மேலும் கூறியுள்ளார்.
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை
இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் சாலையின் ஓரங்களில் நிறுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது, மேலும் விபத்து ஏற்பட்டால் சாலைக்கு வெளியே உள்ள அருகில் உள்ள பாதுகாப்பான பார்க்கிங் பகுதிக்கு தங்கள் வாகனங்களை நகர்த்துமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் சாலையின் ஓரங்களில் நியாயமற்ற முறையில் நிறுத்துவது ஆபத்தான போக்குவரத்து மீறலாகும், இது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை சீர்குலைக்கும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, வேக வரம்புகளை கடைபிடிக்கவும், சாலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், எதிர்பாராத சூழ்நிலைகளை, குறிப்பாக அதிவேக சாலைகளில் எதிர்பார்க்கவும் வாகன ஓட்டிகளை அதிகாரி பின் சுவைதான் வலியுறுத்தியுள்ளார்.
சாலை ஓரங்கள் திடீர் வாகன பழுதடைதல் அல்லது மருத்துவ சூழ்நிலைகள் போன்ற அவசரநிலைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் போக்குவரத்து மீறல்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்பதை துபாய் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel