ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தினசரி கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய குடிமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இந்திய தூதரகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. தங்கள் சமூக ஊடக சேனலில் வெளியிட்டிருக்கும் ஒரு ஆலோசனையில், நாட்டில் அதிகாரிகள் வழங்கிய அனைத்து கோவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த குடியிருப்பாளர்களை அது மேலும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் டிவீட்டில் “அவ்வப்போது அமீரக சுகாதார அதிகாரிகள் வழங்கிய கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய நாட்டினரின் பொறுப்பு, அதாவது எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பராமரித்தல், பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தல் போன்றவை” என்று தெரிவித்துள்ளது.
மேலும் எந்தவொரு தூதரக சேவைக்கும் துணைத் தூதரகத்திற்குச் செல்ல விரும்பும் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் “முற்றிலும் அவசியமில்லை” எனில் இதுபோன்ற வருகைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் அலுவலகத்திற்கு வருகை தராமல் தூதரகம் வழங்கும் பல்வேறு மின்னணு தளங்களை பயன்படுத்த வேண்டும்” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு சந்தேகம் மற்றும் தேவைகளுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை பின்வரும் எந்த சேனல்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அது கூறியுள்ளது.
> PBSK கட்டணமில்லா எண் 800 46342 (கிடைக்கும் 24×7)
> PBSK துபாய் மொபைல் அப்ப்ளிகேஷன்
> மின்னஞ்சல் முகவரி : pbsk.dubai@mea.gov.in
> வாட்ஸ்அப் அக்கவுண்ட் : 054-3090571