இஸ்ரேல்,US- ஈரான் இடையே 12 வது நாளாக தொடரும் போரின் விளைவாக வளைகுடா நாடுகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றன. இதில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாகவும், இதில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினருக்கும் ஒரு வங்கதேச நாட்டினருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன, அதேவேளையில் ஒரு இந்தியருக்கு மிதமான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோதிலும், விமான நிலையத்தில் வான்வழிப் போக்குவரத்து வழக்கம் போல் தொடர்ந்து இயங்கி வருகிறது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை நிர்வகிக்கும் ‘துபாய் ஏர்போர்ட்ஸ்’ (Dubai Airports) நிறுவனம், கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு சிறிய இடையூறுக்குப் பிறகு, மார்ச் 7 முதலே செயல்பாடுகள் பகுதியளவு மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விமானங்களின் பயண அட்டவணைகள் தொடர்ந்து மாறக்கூடும் என்பதால், தங்கள் விமான நிறுவனம் பயணத்தை உறுதிப்படுத்தும் வரை பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் முன்னதாக நிகழ்ந்த சம்பவம்
கடந்த மார்ச் 1 அன்று, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு முனையப் பகுதியில் (concourse) நிகழ்ந்த ஒரு சம்பவத்தின்போது சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது என்றும், அந்தச் சூழல் அவசர மீட்புக் குழுக்களால் விரைவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அன்றைய சம்பவம் குறித்து அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
மேலும், அந்த சமயத்தில் சூழ்நிலையைக் கையாள்வதற்காக, அவசர மீட்புக் குழுக்கள் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பற்றி விவரிக்கையில் “நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்; அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னரே நடைமுறையில் இருந்த அவசரக்காலத் திட்டங்களின் காரணமாக, பெரும்பாலான முனையங்களிலிருந்து பயணிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தனர்,” என்று துபாய் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தனது முந்தைய அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும் அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel