ADVERTISEMENT

துபாயில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்பு சட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய மாற்றங்கள்!!

Published: 14 Mar 2026, 7:14 PM |
Updated: 14 Mar 2026, 7:14 PM |
Posted By: Menaka

துபாயில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் வாடகையை மலிவு விலையில் வைத்திருக்கவும் பகிரப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் (shared accomodation) மற்றும் படுக்கை இடங்களை நம்பியுள்ளனர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பிறப்பித்த புதிய சட்டம், விரைவில் எமிரேட் முழுவதும் பகிரப்பட்ட வீடுகளுக்கான அனுமதிகள், குடியிருப்பு வரம்புகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் குறித்த தெளிவான விதிகளைக் கொண்டுவருகிறது.

ADVERTISEMENT

துபாயில், குறிப்பாக பணியிடங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் பகிரப்பட்ட வீடுகள் (shared houses) நீண்ட காலமாக இருந்து வருகின்றன. வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்க பல குடியிருப்பாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதே நேரத்தில் சில வீட்டு உரிமையாளர்கள் வாடகை வருமானத்தை அதிகரிக்க அடுக்குமாடி குடியிருப்புகளை பகிரப்பட்ட தங்குமிடங்களாக மாற்றுகிறார்கள்.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ், இந்த ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், கூட்ட நெரிசலைக் குறைத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் குத்தகைதாரர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் இருவரையும் பாதுகாக்கும் முயற்சி என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், குடும்ப உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு முக்கிய மாற்றங்கள்:

1. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பையும் பகிரப்பட்ட இடங்களாக பயன்படுத்த முடியாது

புதிய சட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புகளை தானாகவே பகிரப்பட்ட இடங்களாக மாற்ற முடியாது. பகிரப்பட்ட தங்குமிடமாக வாடகைக்கு விடுவதற்கு முன்பு, துபாய் முனிசிபாலிட்டியிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

ADVERTISEMENT

அதன் படி, மக்கள்தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு திறன் மற்றும் பகுதியின் தன்மை போன்ற காரணிகளின் அடிப்படையில் பகிரப்பட்ட குடியிருப்புகளை நடத்த எந்த சுற்றுப்புறங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பதையும் அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

2. குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகள்

புதிய விதிகள் தெளிவான தரநிலைகளை அறிமுகப்படுத்தும்:

  • ஒரு யூனிட்டில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை
  • ஒரு குடியிருப்பாளருக்கு தேவையான குறைந்தபட்ச இடம்
  • சமையலறைகள் மற்றும் குளியலறைகள் போன்ற கட்டாய பகிரப்பட்ட வசதிகள்

இந்த நடவடிக்கைகள் நெரிசலான வாழ்க்கை நிலைமைகளைத் தடுக்கவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

3. அங்கீகரிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே பகிரப்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியும்

சொத்து உரிமையாளர்கள் அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பகிரப்பட்ட குடியிருப்புகளை சட்டப்பூர்வமாக வாடகைக்கு விட அனுமதிக்கப்படும்.

குத்தகைதாரர்கள் இனி தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் படுக்கைகள் (bedspace ) அல்லது பிரிக்கப்பட்ட இடங்களை (partition places) துணை குத்தகைக்கு விட அனுமதிக்கப்பட மாட்டார்கள். பகிரப்பட்ட வீடுகளை உரிமையாளரால் நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மூலமாகவோ வழங்க வேண்டும்.

4. பகிரப்பட்ட குடியிருப்புகளை கண்காணிக்க புதிய டிஜிட்டல் பதிவேடு

துபாய் நிலத் துறை பகிரப்பட்ட குடியிருப்புகளுக்கு ஒரு பிரத்யேக டிஜிட்டல் பதிவேட்டை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவேடு பின்வரும் விவரங்களைப் பதிவு செய்யும்:

  • வீட்டு உரிமையாளர் குறித்த தகவல்கள்
  • அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் எண்ணிக்கை
  • குடியிருப்பின் விவரக்குறிப்புகள் மற்றும் அமைப்பு
  • ஒவ்வொரு வசிப்பவருக்கும் ஒதுக்கப்பட்ட இடம்

மேலும், குத்தகை ஒப்பந்தங்கள் இந்த விவரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும், இது இத்துறையில் அதிக வெளிப்படைத்தன்மையை உருவாக்கும். பகிரப்பட்ட குடியிருப்புகளுக்கான வாடகை விலைகளை நெறிப்படுத்த, அதிகாரிகள் ஒரு ‘வாடகை வழிகாட்டி’ (rent indicator) அமைப்பையும் அறிமுகப்படுத்துவார்கள் என்று கூறப்படுகின்றது.

5. கடுமையான பாதுகாப்புத் தரநிலைகள்

அனைத்து பகிரப்பட்ட குடியிருப்புகளும் பின்வரும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு இணங்க வேண்டும்:

  • தீ பாதுகாப்பு
  • சுகாதாரம் மற்றும் தூய்மை
  • மின் அமைப்புகள்
  • கட்டிடப் பாதுகாப்பு

வீட்டில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதே இத்தரநிலைகளின் நோக்கமாகும்.

6. விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதங்கள்

விதிமீறல்களுக்கு, அதிகாரிகள் 500 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரையிலான தொகையை அபராதமாக விதிக்கலாம். ஓராண்டுக்குள் மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் நடந்தால், அபராதத் தொகை 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அமலாக்க நடவடிக்கைகளில் பின்வருவனவும் அடங்கலாம்:

  • சொத்து தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்துதல்
  • அனுமதிகளை ரத்து செய்தல்
  • நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தல்
  • அடிப்படைச் சேவைகளை (மின்சாரம், நீர் போன்றவை) துண்டித்தல்
  • விதிமுறைகளுக்கு இணங்காத குடியிருப்புகளிலிருந்து வசிப்பவர்களை வெளியேற்றுதல்

இது போன்ற பகிரப்பட்ட குடியிருப்புகள் தொடர்பான சர்ச்சைகள், துபாய் வாடகைச் சர்ச்சைகள் மையத்தால் (Dubai Rental Disputes Center) கையாளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள பகிரப்பட்ட குடியிருப்புகளின் நிலை என்ன?

துபாய் முழுவதும் ஏற்கனவே பல பகிரப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இயங்கும் நிலையில், அவையனைத்தும் உடனடியாகப் பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, புதிய விதிகளுக்கு இணங்குவதற்குச் சொத்து உரிமையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், அதிகாரிகள் ஒருமுறை மட்டும் நீட்டிப்பு வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதும், துபாயில் பகிரப்பட்ட குடியிருப்புகள் நிர்வகிக்கப்படும் முறையை இது கணிசமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இத்தகைய குடியிருப்புகள் எங்கு அனுமதிக்கப்படும், ஒரு குடியிருப்பில் எத்தனை பேர் வசிக்கலாம், மற்றும் யார் அவற்றைச் சட்டப்பூர்வமாக வாடகைக்கு விடலாம் என்பன போன்ற அம்சங்களை இது தீர்மானிக்கும் என்பது புலப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel