ADVERTISEMENT

துபாய் முழுவதும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாட்ட ஏற்பாடுகள் மும்முரம்..!!

Published: 20 Mar 2026, 6:36 AM |
Updated: 20 Mar 2026, 6:36 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (மார்ச் 20) ஈத் அல்-ஃபித்ர் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், துபாய் முனிசிபாலிட்டி, பண்டிகையை முன்னிட்டு பல பொது கடற்கரைகளை குடும்பங்களுக்கான பிரத்யேக பகுதிகளாக அறிவிப்பது உட்பட, தொடர்ச்சியான கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரைகளில் ஜுமைரா பீச் 1, 2 மற்றும் 3, அத்துடன் உம் சுக்கீம் பீச் 1 மற்றும் 2 ஆகியவை அடங்கும். மேலும், இரவு நேரக் கடற்கரைகளும் இதில் அடங்கும். குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

பூங்காக்கள் மற்றும் ஈத் கொண்டாட்டங்கள்

வுல்ஃபா காலத்தின் (Season of Wulfa) ஒரு பகுதியாக, முஷ்ரிஃப் நேஷனல் பார்க், அல் மம்சார் பீச் பார்க், மற்றும் ஸபீல் பார்க் போன்ற முக்கிய பூங்காக்களில், பண்டிகையின் முதல் இரண்டு நாட்களில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஈத் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் நேரடி நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்பு தயாரிக்கும் காட்சிகள் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

இவற்றுடன் நாத் அல் ஷபா பார்க்கிலும் முதல் முறையாக, ஈத் பெருநாள் மூன்றாம் நாளில் ஒரு சிறப்பு ஈத் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலாச்சார ஒர்க் ஷாப், பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறும்.

இதற்கிடையில், சில்ட்ரன்ஸ் சிட்டி துபாய், ஈத் பெருநாளின் முதல் மற்றும் மூன்றாம் நாட்களில் குழந்தைகளுக்காக விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் பரிசு விநியோகம் உள்ளிட்ட ஈத் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீவிர ஆய்வு நடவடிக்கைகள்

அதுமட்டுமின்றி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துபாய் முனிசிபாலிட்டி ஒரு விரிவாக்கப்பட்ட ஆய்வு இயக்கத்தையும் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், நிகழ்விடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட் மற்றும் துபாய் ஃபுட் ஹப் ஆகிய இடங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு, சேமிப்பு, சுகாதாரம் மற்றும் தயாரிப்புத் தரம் ஆகியவை முக்கியக் கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆய்வுகள் பின்வரும் இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன:

  • ஹோட்டல்கள், சலூன்கள், ஜிம் மற்றும் ஷிஷா கஃபேக்கள்
  • பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது வசதிகள்
  • நீச்சல் குளங்கள் மற்றும் ஹென்னா தயாரிப்பு பாதுகாப்பு

தொழிலாளர் நலன் மற்றும் தூய்மைத் திட்டங்கள்

அத்துடன் முஹைஸ்னா, அல் கூஸ் மற்றும் ஜெபல் அலி போன்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர் தங்குமிடங்களில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வதோடு, ஆயிரக்கணக்கானோர் பயனடையும் வகையில் தொழிலாளர்களுக்கான ஈத் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், பொது இடங்கள், கடற்கரைகள், சாலைகள் மற்றும் சந்தைகள் முழுவதும் சுகாதாரத்தைப் பேணுவதற்காக, 2,800-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு, ஒரு விரிவான துப்புரவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் முறையான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை ‘Dubai 24/7’ செயலி மூலமாகவோ அல்லது நகராட்சியின் அவசர உதவி எண் மூலமாகவோ தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துபாய் முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, பாதுகாப்பான, கொண்டாட்டமான மற்றும் மகிழ்ச்சிகரமான ஒரு ஈத் அனுபவத்தை உறுதி செய்வதே இந்த விரிவான திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel