ஈரான் உடனான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் மோதலால் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமீரகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் படம்பிடித்து, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 109 நபர்களை அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பொய்யான தகவல்களை அந்த நபர்கள் பதிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் இணையச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தும் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சரிபார்க்கப்படாமல் அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் இருந்து பெறப்பட்ட செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரும்போது கவனமாக இருக்குமாறும், இதுபோன்ற நடத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறுகிறது என்றும் அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
சரிபார்க்கப்படாத காணொளிகள் அல்லது தகவல்களைப் பரப்புவது, பொதுமக்களிடையே பீதியையும் குழப்பத்தையும் உருவாக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கும் மற்றும் சமூகப் பாதுகாப்பை சீர்குலைக்கும் என காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே, சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வழிகளை மட்டுமே நம்புமாறும், தாக்குதல் தொடர்பான சம்பவ இடங்களைப் படம்பிடிப்பதையோ அல்லது அவற்றின் காட்சிகளைப் பகிர்வதையோ தவிர்க்குமாறும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலைகளின் போது, பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும், பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த வழிகாட்டுதல்களை மதிப்பது அவசியம் என பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel