ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்த சமயத்தில், நாடு முழுவதும் மக்கள் காட்டிய ஒற்றுமை, கருணை செயல்பாடுகளும் மற்றும் அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகளும் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, துபாய்வாசி ஒருவர் வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்காகத் தனது வீட்டின் வாயில்களைத் திறந்து, நெருக்கடியான தருணத்தை ஒரு கருணைமிக்க தருணமாக மாற்றிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் கடுமையாகச் சூழ்ந்திருந்த நிலையில், வாகனங்கள் பாதுகாப்பாக மறுபுறத்தை அடைய அவரது வீட்டின் முற்றம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்தச் செயல் இணையத்தில் விரைவாகக் கவனத்தை ஈர்த்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக ஒற்றுமை உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி, அமீரகங்கள் முழுவதும், அவசரகாலக் குழுக்கள் அயராது உழைத்த நிகழ்வுகளுக்கும் குடியிருப்பாளர்களிடையே பாராட்டுக்கள் குவிகின்றன. ஷார்ஜாவில் உள்ள ஏர்போர்ட் ஸ்ட்ரீட்டில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அபாயகரமான சூழ்நிலையிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபடி, ஒரு காவல்துறை அதிகாரி ஆழமான வெள்ள நீரில் நின்றுகொண்டிருந்த காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்தது.
அதுமட்டுமில்லாமல், மோசமான வானிலைக்கு மத்தியில் நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர். துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், வெள்ளம் சூழ்ந்த சாலைகளைச் சீர்செய்ய 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளையும் 380 பம்பிங் யூனிட்களையும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஷார்ஜா குடிமைப் பாதுகாப்பு ஆணையம், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நீர்நிலைகளில் செல்லக்கூடிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது.
குடியிருப்பாளர்களின் பங்களிப்பு
இந்த ஒற்றுமை உணர்வு அமீரக அதிகாரிகளைத் தாண்டியும் விரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களைப் பாதுகாக்க ஒன்றிணைந்தனர். ஒரு நிகழ்வில், ஒரு குழுவினர் பலத்த காற்று மற்றும் கனமழையையும் பொருட்படுத்தாமல், பிரதான சாலையில் அடித்து வரப்பட்ட பெரிய குப்பைத் தொட்டிகளை அகற்றினர். இதன் மூலம், ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுத்து, போக்குவரத்து நெரிசலையும் குறைத்தனர்.
இத்தகைய செயல்கள், புயலின் போது மற்றவர்கள் பாதுகாப்பாகச் சென்றடைய உதவ பலர் முன்வந்ததன் மூலம், ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வைப் பிரதிபலித்தன.
அதேசமயம், முனிசிபாலிட்டி ஊழியர்களும் பரவலான பாராட்டுகளைப் பெற்றனர். ஷார்ஜாவில், முக்கியப் பகுதிகளுக்கு அருகிலுள்ள வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் இருந்து நீரை வெளியேற்ற, குழுக்கள் டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தி இரவு பகலாக உழைத்து, இயல்பான போக்குவரத்து ஓட்டத்தை மீட்டெடுக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
ஒரு குடியிருப்பாளர் இந்த முயற்சிகளை வீடியோவில் பதிவுசெய்து, ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில் “எங்கள் நாயகர்கள்” என்ற வாசகத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த உணர்வு அது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரின் உணர்வுகளை எதிரொலித்தது.
சவாலான வானிலை நிலைகளுக்கு மத்தியிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய பலம் உள்கட்டமைப்பு அல்லது மீட்பு அமைப்புகளில் மட்டுமல்ல, அதன் மக்களின் ஒற்றுமையிலும் மனிதநேயத்திலும்தான் உள்ளது என்பதை இந்த சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil WhatsApp Channel