தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்வதாகப் பொய்யாக வாக்குறுதியளித்த ஒரு நபருக்கு, 19,600 திர்ஹம்ஸ் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என அபுதாபி குடும்ப, உரிமையியல் மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகை மோசடியானது என்பதை நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பணத்தைத் திருப்பிச் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்காக 5,000 திர்ஹம் இழப்பீடு வழங்கவும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எமராத் அல் யோம் பத்திரிகையின் அறிக்கையின்படி, தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகளைப் பெற்றுத் தர முடியும் என்று தன்னை நம்பவைத்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டுகளை வழங்கவில்லை என கூறப்படுகின்றது.
அந்த நபர் ஏற்கனவே இது தொடர்பான ஒரு குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் முந்தைய குற்றவியல் தண்டனை உரிமையியல் வழக்கை வலுப்படுத்துவதாகவும், பணத்தைத் திருப்பித் தருவது குற்றம் சாட்டப்பட்டவரின் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பணத்திலிருந்து கிடைக்கக்கூடிய சாத்தியமான பலனை இழத்தல், சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் போன்ற காரணங்களுக்காக இழப்பீடு வழங்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற தீர்ப்பின் படி, முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தவும், இழப்பீடு வழங்கவும், நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் சட்டச் செலவுகளை ஏற்கவும் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, மோசடியின் சட்டரீதியான விளைவுகளை எடுத்துக்காட்டுவதோடு, நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்புகளையும் வலுப்படுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel