ADVERTISEMENT

கனமழையின் போது குடியிருப்பாளர்களுக்கு உதவிய அஜ்மான் காவல்துறை: வீட்டு வாசலிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்த அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

Published: 31 Mar 2026, 12:26 PM |
Updated: 31 Mar 2026, 1:01 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு மத்தியில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை அஜ்மான் காவல்துறை பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மோசமான வானிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒரு பெண்ணுக்கு, அதிகாரிகள் ரொட்டி மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதைக் காணமுடிகிறது. அப்பெண் வெளிப்படையான நிம்மதியுடன் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெள்ளம் மற்றும் கடினமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் செய்த இத்தகைய கருணைச் செயல்கள் அளித்த நம்பிக்கையை இந்த நெகிழ்ச்சியான பரிமாற்றம் பிரதிபலித்தது.

ADVERTISEMENT

அதேபோல் பரவலாகப் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில், கனமழை கொட்டிப் பெய்த போதிலும், வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் அஜ்மான் காவல்துறை அதிகாரி ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது காணப்பட்டது. ரெயின்கோட் அணிந்திருந்த அவர், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் வாகன ஓட்டிகளை அமைதியாக வழிநடத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

மற்றொரு சம்பவத்தில், துபாயிலிருந்து ஷார்ஜாவுக்குப் பயணம் செய்த ஒரு குடும்பம், தங்கள் மகனை கீமோதெரபி சிகிச்சைக்காக அவசரமாக அழைத்துச் சென்றபோது, மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அந்த சமயத்தில், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் குழு ஒருங்கிணைந்து, அவர்களைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியதுடன், மிகுந்த மன அழுத்தமான சூழலையும் தணித்தது.

ADVERTISEMENT

அதிகாரிகளைப் போலவே, குடியிருப்பாளர்களும் மோசமான வானிலையின் போது பிறருக்கு உதவ முன்வந்தனர். வைரலான ஒரு வீடியோவில், இளைஞர்கள் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல், பரபரப்பான சாலையில் அடித்து வரப்பட்ட பெரிய குப்பைத் தொட்டிகளை அகற்றி, ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுத்தனர்.

துபாயில், மழையின் போது துபாய் காவல்துறையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தொலைந்துபோன 279 வாகனப் பதிவு எண்களைத் திரும்பக் கொடுத்தும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்த 30 வாகனங்களை மீட்க உதவியும் செய்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் நெருக்கடியான சூழலில் அமீரகக் குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பின்விளைவுகள் மற்றும் மீட்புப் பணிகள்

ஐக்கிய அரபு அமீரகம் மார்ச் 22 முதல் மார்ச் 27 வரை நிலையற்ற வானிலையை எதிர்கொண்ட நிலையில், பல மணி நேரம் நீடித்த கனமழை, நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மார்ச் 28-ஆம் தேதிக்குள் வானிலை சீரடைந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கனமழை காரணமாக அஜ்மானில், பலத்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக மரங்கள் விழுந்தன, வாகனங்கள் சேதமடைந்தன, மேலும் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக புகார்கள் எழுந்தன.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் விரைவாக வடியச் செய்யப்பட்டு, துரிதமான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

அஜ்மான் முனிசிபாலிட்டி, அவசரநிலைகளைக் கையாளவும் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், எமிரேட் முழுவதும் விரைவு மீட்புக் குழுக்களையும் வாகனங்களையும் பணியில் ஈடுபடுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றய்ப்படி, சில பகுதிகளில் மழை குறைந்த பின்னரும் கூட, சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. குழுக்கள் இடிபாடுகளை அகற்றவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், பொதுப் பாதுகாப்பைப் பேணவும் இரவு பகலாக உழைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel