UAE: சோர்வு, தூக்கக் கலக்கத்துடன் பஸ், டாக்ஸி ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய AI சிஸ்டம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) டாக்ஸி மற்றும் பஸ் டிரைவர்கள் அனைவரும் சோர்வு இல்லாமல் வண்டிகள் ஓட்டுவதை உறுதி செய்ய புதிய AI (Artificial Intelligence) மூலம் இயங்கும் ஸ்மார்ட் சிஸ்டத்தை முயற்சித்து வருகிறது.
இந்த புதிய முயற்சியின் மூலம் ஓட்டுனர்கள் சோர்வாகவோ அல்லது தூங்கிக்கொண்டோ வாகனங்களை ஓட்டுவதை கண்டறியலாம் என்றும் இது போன்ற காரணங்களால் ஏற்படும் சாலை விபத்துகளை இந்த புதிய AI சிஸ்டம் பெருமளவு குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து RAKTA-வின் பொது மேலாளர் இஸ்மாயில் ஹசன் அல் ப்ளூஷி அவர்கள் கூறுகையில், “டாக்ஸி மற்றும் பஸ் ஓட்டுநர்களின் முகங்களுக்கு முன்னால் ‘Shaheen’ (Falcon) எனும்ஸ்மார்ட் சிஸ்டத்தின் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஓட்டுனர்களின் முக அம்சங்களை கண்காணித்து பகுப்பாய்வு செய்கிறது. ஓட்டுநர்களிடம் சோர்வுக்கான அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக ஸ்மார்ட் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “பயணத்தின் போது ஓட்டுனர்களின் நடத்தை, வேக வரம்புகள், பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல், பிரேக்குகளைப் பயன்படுத்துதல், திடீரென திசை மாற்றி ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிற மீறல்களைக் கண்காணிக்கும் மற்றும் பதிவுசெய்யும் மற்றொரு சாதனத்துடன் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஸ்மார்ட் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் சேகரிக்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்து சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.