UAE: குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கி வந்த பேச்சுலர்களை வெளியேற்றும் சோதனை நீட்டிப்பு..!! அபார்ட்மெண்ட்களிலும் தொடர்கிறது அதிகாரிகளின் சோதனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷார்ஜா முனிசிபாலிடி இவ்வாறு சட்டவிரோதமாக தங்கி வரும் நபர்களைக் கண்டறிந்து அதற்கு எதிரான தனது பிரச்சாரத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இது தற்பொழுது நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு அபார்ட்மெண்ட்களை உள்ளடக்கியுள்ளது. சோதனைகளின் போது, குடிமை அமைப்பானது (civic body) பல முறைகேடுகளையும், அத்துடன் அபார்ட்மெண்ட்களை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதையும் கண்டறிந்துள்ளது.
இந்த சோதனையின் போது ஆய்வாளர்கள் ஒரு அபார்ட்மெண்டில் பலர் வசிப்பது மற்றும் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுவது போன்ற விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிடியின் இயக்குநர் ஜெனரல் தபேத் அல் தரிஃபி அவர்கள் கூறுகையில், “ஷார்ஜா முனிசிபாலிடி தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பேச்சுலர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாழ அவர்களை வழிநடத்தியுள்ளது” என்று கூறினார்.
ஷார்ஜாவில் குடும்பங்கள் மட்டுமே வசிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 13,000 தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்களை குடும்பங்களுக்கு அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதாக நகராட்சி அறிவித்ததை தொடர்ந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த ஆறு மாதங்களில் ஷார்ஜா காவல்துறை மற்றும் ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (Sewga) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் குடிமை அமைப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குடும்பங்களுக்கு ஏற்ற சூழலை உறுதி செய்வதற்கும் அவர்களின் தனியுரிமை, பாதுகாப்பிற்கும் நகராட்சி தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறி வசிப்பவர்களை தொடர்ந்து வெளியேற்றும் என்று தரிஃபி தெரிவித்துள்ளார்.
முனிசிபாலிடி மேற்கொண்ட சோதனையின் போது விதிகளை மீறி வசிக்கும் வீடுகளில் இருந்து மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை முனிசிபாலிடி துண்டித்தது. அதே போல், ஏராளமான வாடகைதாரர்களுக்கு இடமளிக்க ஒரு வீட்டிலேயே பகிர்வுகளை (partition) உருவாக்குவதன் மூலம் வீட்டு விதிகளை மீறியவர்களுக்கும் முனிசிபாலிடி அபராதம் விதித்துள்ளது. இது தற்பொழுது பரவி வரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும், இரு தரப்பினரும் வீட்டு விதிமுறையை மீறுவதைத் தடுப்பதற்கும், அழகியல் தோற்றத்தையும், குடும்பங்களின் பாதுகாப்பையும், தனியுரிமையையும் பாதுகாக்க, குத்தகை ஒப்பந்தங்கள் மூலம் உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்த முனிசிபாலிடி ஆர்வமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
993 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கால் சென்டர் வழியாகவோ அல்லது முனிசிபாலிடியின் பிற அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாகவோ முனிசிபாலிடியை தொடர்புகொள்வதன் மூலம் வீடுகளில் தங்குவதற்குண்டான விதிகளை மீறுதல் தொடர்பான பொதுக் கருத்துகள், விசாரணைகள் மற்றும் அறிக்கைகளை தெரியப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள் மற்றும் அறிக்கைகள் குறித்து ஆய்வுக் குழுக்கள் உடனடியாகப் பின்தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.