துபாய் காவல்துறையின் விரைவான நடவடிக்கையைத் தொடர்ந்து, துபாயின் ஹத்தா மலைத்தொடரின் கரடுமுரடான நிலப்பரப்பில் மலையேற்றத்தின் போது சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த இரண்டு பெண் சுற்றுலா பயணிகள் காவல்துறை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, கடுமையான சோர்வு காரணமாக மலையேற்றத்தைத் தொடர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும், அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேவ் யூனிட் (Brave Unit), ஹத்தா காவல்துறை ரோந்துப் படையினர் மற்றும் துபாய் ஆம்புலன்ஸ் சேவைக் கழகத்தின் துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு அணிகள் உடனடியாக களமிறக்கப்பட்டதாக ஹத்தா காவல் நிலையத்தின் இயக்குநரான பிரிகேடியர் முபாரக் அல் கெத்பி தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்புக் குழுவினர் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மலைப்பகுதியில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை கண்டுபிடித்ததாகவும், சிறப்பு மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்தப் பெண்களை ஒரு மருத்துவ மையத்தில் அனுமதித்து, அங்கு அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற கடினமான நிலப்பரப்புகளில் ஏற்படும் அவசரநிலைகளைக் கையாள, ஹத்தா மீட்புக் குழுக்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அணிகளில் உள்ள உபகரணங்கள்:
- சிறப்பு ஆஃப்-ரோடு வாகனங்கள்
- இரவு நேர நடவடிக்கைகளுக்கான வெப்ப ட்ரோன்கள்
- மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள்
- கனரக மீட்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
அதுமட்டுமில்லாமல், அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிகழ்நேரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மலையேறுபவர்களுக்கான பாதுகாப்பு நினைவூட்டல்
மலை போன்ற தொலைதூரப் பகுதிகளை ஆராயும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பின்வருவனவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
- குறிக்கப்பட்ட பாதைகளிலேயே செல்லுங்கள்
- போதுமான தண்ணீர் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்
- உங்கள் இருப்பிட விவரங்களைப் பகிருங்கள்
- அவசர காலங்களில் 999 எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது காவல்துறை செயலியின் SOS அம்சத்தைப் பயன்படுத்தவும்
இச்சம்பவத்தில், துல்லியமான இருப்பிடப் பகிர்வு மற்றும் முன்கூட்டியே தகவல் பரிமாற்றம் ஆகியவை விரைவான மீட்புக்கு உதவியதுடன், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஹத்தா மலைத்தொடரின் நிலப்பரப்புகள் சாகசங்களை வழங்கினாலும், பாதுகாப்பிற்கு முறையான திட்டமிடலும் எச்சரிக்கையும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel