அமீரக செய்திகள்

அமீரகத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களுக்கும் அபராதம் தள்ளுபடி..!! நாட்டை விட்டு வெளியேற மூன்று மாத கால அவகாசம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்களின் அபராதங்களை தள்ளுபடி செய்வதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ரெசிடென்ஸ் விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் அபராதங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தில் காலாவதியான ரெசிடென்ஸ் விசா மற்றும் காலாவதியான விசிட் விசா வைத்திருப்பவர்கள் உட்பட இருப்பிட விதிகளை மீறியவர்கள் (Residence Violaters) அனைவருக்கும் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற மே 18 ம் தேதியிலிருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அதிகாரசபையின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் துறைமுகங்களின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சயீத் ரகன் அல் ரஷிதி (Director General of Foreigners Affairs and Ports at the authority) கூறுகையில், “கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பானது தனிநபர்கள் தங்களின் காலாவதியான ரெசிடென்ஸ் விசாவினை புதுப்பிக்க இயலாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. இந்த விதிவிலக்கான நிபந்தனைகளின் அடிப்படையில், அனைத்து ரெசிடென்ஸ் மற்றும் நுழைவு மீறல்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அமீரகத்தை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் படி, சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த அனைத்து நிர்வாக அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பில் ரெசிடென்ஸ் விதிகளை மீறியவர்கள் (residency violators), நுழைவு மற்றும் விசா அனுமதிகளுக்கான விதிகளை மீறியவர்கள் (entry and visa permits violators), அவர்களது ஸ்பான்சார்களிடமிருந்து தலைமறைவானவர்கள் (absconders from their sponsors) மற்றும் மார்ச் 1,2020 ஆம் தேதிக்கு முன்னர் வேலை ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலாளர் அட்டைகளுக்கான விதிகளை மீறியவர்கள் (violators of employment contracts and labour cards) ஆகியோர் அடங்குவர்.

இவ்வாறு விதிகளை மீறி அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்து ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்க விரும்பினால் அவர்களுக்கு மேற்கூறிய சலுகைகள் எதுவும் கிடைக்காது என்றும் மேஜர் ஜெனரல் அல் ரஷிதி விளக்கியுள்ளார்.

பொது மன்னிப்பில் அனைத்து சட்டவிரோத குடியிருப்பாளர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் சுற்றுலாவாசிகள் ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டைக்கான அபராதம் மற்றும் புறப்படும் கட்டணம், விசாக்களை ரத்து செய்வதற்கான கட்டணம் மற்றும் தொழிலாளர் அனுமதிகளை புதுப்பித்தலுக்கான கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் கிடைத்தால் பொதுமன்னிப்பை பெற்று நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய முடியும் என்றும் அல் ரஷிதி தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய தள்ளுபடி மற்றும் விலக்குகள் குறித்த கூடுதல் விவரங்கள் வியாழக்கிழமை தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!