வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியா, ஓமானிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் சிறப்பு விமானங்கள்..!!

வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையானது கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவந்த இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்டமாக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வளைகுடா நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நான்கு விமானங்கள் தமிழகத்திற்கு செல்லவுள்ளன. அதே போல், மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஓமான் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு செல்லவிருக்கும் விமானங்களின் விபரங்களை அந்தந்த நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா

இந்த மூன்றாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், சவூதி அரேபியாவிலிருந்து மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படவிருக்கும் அனைத்து விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட திட்டத்தின் அட்டவணைப்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 4 ஆம் தேதி ஒரு விமானமும், இரண்டாவதாக தமாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 5 ம் தேதி ஒரு விமானமும், மூன்றாவதாக ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 6 ம் தேதி ஒரு விமானமும் இயக்கப்படும் என சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வார திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் சவூதி அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு விமானமும் இயக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ஓமான்

வந்தே பாரத் திட்டத்த்தின் மூன்றாவது கட்ட நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவை தொடர்ந்து ஓமான் நாட்டிலிருந்தும் தமிழகத்திற்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓமான் நாட்டின் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஜூன் 7 ம் தேதி ஒரு சிறப்பு விமானம் இயக்கப்படும் என ஓமான் நாட்டிற்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு விமானம் மட்டுமே ஓமானிலிருந்து தமிழகத்திற்கு செல்ல ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!