அமீரக செய்திகள்

கொரோனா விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் தொடர்ந்து அமலில் இருக்கும்..!! அமீரக அரசு எச்சரிக்கை..!!

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்காக கடந்த மே மாதம் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட விதிமீறல் மற்றும் அதற்கான அபராதம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தொடர்ந்து தற்போது வரையிலும் நடைமுறையில் உள்ளதாக கூட்டாட்சி பொது வழக்குகளின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவின் செயல் தலைவர் சலீம் அல் ஜாபி தெரிவித்துள்ளார். அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் எந்நேரமும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால், விதிமீறல்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அவர் மீண்டும் பொதுமக்களுக்கு அபராதம் குறித்து எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “அமீரகத்தில் தேசிய சுத்திகரிப்பு நிறைவுற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இயக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பொதுமக்கள் அமீரகத்தின் எந்த பகுதிகளுக்கும் தடையின்றி செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் பின்னர், விதிமீறல்கள் அதிகரித்து இருப்பதை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்”
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கூறுகையில், “விதிமீறலை இரண்டாம் முறை செய்தவர்களுக்கு அபராதம் இரட்டிப்பாகும் என்றும் மூன்றாம் முறை செய்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்” என்றும் அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

மேலும், அமீரகத்தில் வசிக்கும் குடும்பத்தினர்கள் தங்களின் நேரடி உறவு முறை கொண்ட முதல் தர குடும்ப உறுப்பினர்களை மட்டுமே சந்திக்கலாம் என்றும், சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும், சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றவும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அல் ஜாபி கூறியுள்ளார்.

மே 19 அன்று அறிவிக்கப்பட்ட அபராதம் மற்றும் அபராதங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள்

  • ஒரு விருந்து அல்லது கூட்டமாக ஒன்று கூடினால் அதனை ஏற்பாடு செய்தவருக்கு 10,000 திர்ஹம் மற்றும் அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 5,000 திர்ஹம் அபராதம்
  • வாகனங்களில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தால் 3,000 திர்ஹம் அபராதம்
  • வேலை செய்யும் இடங்கள் அல்லது கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பிற இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க தவறும் தனிநபருக்கு 3,000 திர்ஹம் அபராதம், நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்

அலுவலகங்கள்

  • வேலை செய்யும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஊழியருக்கு 500 திர்ஹம் அபராதம்

கொரோனா பரிசோதனை

  • வீட்டு தனிமைப்படுத்தலின் போது கடைபிடிக்கவேண்டிய விதிகளை மீறினால் 50,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்களை கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷனை (smart App for COVID-19 tracing) தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய மறுக்கும் எந்தவொரு நபருக்கும் 10,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தையோ (tracking device) அல்லது மொபைல் அப்ளிகேஷனையோ சேதப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு 20,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தால் 5,000 திர்ஹம் போன்ற விதிமுறைகள் தற்பொழுதும் அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!