அமீரக செய்திகள்

UAE: வீட்டு தனிமைப்படுத்தலுக்கு குளியலறையுடன் கூடிய தனி அறை கட்டாயம்..!! துபாய் திரும்புபவர்களுக்கான புதிய அறிவிப்பு..!!

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தனிமைப்படுத்தலுக்கான (quarantine) புதிய வழிமுறைகளை துபாய் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ஹோட்டல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் குடியிருப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

துபாய் சுற்றுலாத்துறை (Dubai tourism) வெளியிட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளிநாடுகளிலிருந்து துபாய்க்கு திரும்பி வரும் குடியிருப்பாளர்களுக்கு (residents) மட்டுமே என்றும், சுற்றுலாவாசிகளுக்கு (tourist) இது பொருந்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) பல்வேறு நாடுகளில் இருந்து 200,000 குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதை இலக்காக கொண்டு ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளதாக நேற்று (ஜூன் 12) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து துபாய் திரும்பும் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலிலோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலிலோ இருக்கலாம் என்று புதிய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. எனினும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளுக்கு பொருந்தக்கூடியவர்கள் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு வருவதற்கு முன்பு, 14 நாள் தனிமைப்படுத்தளுக்கான தேவை, தனிமைப்படுத்த தகுதி வாய்ந்த ஹோட்டல்கள் மற்றும் கட்டணங்கள் மற்றும் வீடு அல்லது ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகள் பற்றிய தகவல்களை பயணிகள் முழுமையாகக் தெரிந்திருக்க வேண்டும் என்றும், மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் அவர்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போதும் மற்றும் அதற்குப் பிறகும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் துபாய் சுற்றுலா துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களின் பட்டியல் குறித்த விபரங்கள் துபாய் சுற்றுலா (dubai tourism) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் துபாய் வந்தவுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் பின்பு COVID-19 DXB எனும் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, தேவைக்கேற்ப ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பாளர்களின் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான கோரிக்கைகள் முறையாக சரிபார்க்கப்பட்டு, அவர்களில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைக்கு பொருந்தாத குடியிருப்பாளர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான முன்பதிவு தேவைப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு, குடியிருப்பாளர்கள் வழக்கமான குடியேற்ற அனுமதிக்கு (immigration) பிறகு தங்களின் உடைமைகளை (luggage) எடுக்க அனுமதிக்கப்படுவர்.

துபாய் வரும் குடியிருப்பாளர்களில் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் அமீரகத்தின் பிற நகரங்களுக்கு செல்லும் பயணிகள், தங்களின் பயணங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அத்துடன் சமூக இடைவெளி உள்ளிட்ட தேவைகளைப் பராமரிப்பதும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு….

  • தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் குடியிருப்பாளர்கள் ஹோட்டல் அறைக்குள் தங்க வேண்டும்.
  • பிரத்யேக மொபைல் பயன்பாட்டின் மூலம் 24/7 என்ற டெலி-டாக்டரை அவர்கள் அணுகலாம்.
  • தங்கும் அறைகளை சுத்தம் செய்து, தேவைக்கேற்ப முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.
  • ஹோட்டலில் தங்குபவர்களின் மருத்துவ நிலை மாறினால், தேவையான நடவடிக்கை வேண்டி ஹோட்டல் நிர்வாகம் துபாய் சுகாதார ஆணையத்திற்கு (DHA) தெரிவிக்கும்.
  • 14 நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்தவுடன், குடியிருப்பாளர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்.

வீட்டு தனிமைப்படுத்தலுக்கான அளவுகோல்கள்…

  • வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு குடியிருப்பாளர்கள் தங்குவதற்காக குளியலறையுடன் கூடிய ஒரு தனி அறை இருக்க வேண்டும்.
  • குடியிருப்பாளரின் உடல்நிலை நிலையானதாக இருக்க வேண்டும், மேலும் குடியிருப்பாளரோ அல்லது பிற வீட்டு உறுப்பினர்களோ அதிக ஆபத்துள்ள பிரிவில் வரக்கூடாது.
  • அவர்களிடம் செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண் இருக்க வேண்டும்
  • அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்
  • தெர்மோமீட்டர் உள்ளிட்ட முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்
  • குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் ஆப் அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப்பட வேண்டும்.
  • அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளைக் கண்காணித்து வெப்பநிலை பரிசோதனையை உறுதி செய்ய வேண்டும்.
  • அவசரநிலை ஏற்பட்டால், அவர்கள் பயன்பாட்டில் உள்ள SOS அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் DHA இன் ஹாட்லைனை 800342 என்ற எண்ணிலோ அல்லது ஆம்புலன்ஸ் 997 என்ற எண்ணிலோ அழைக்க வேண்டும்.
  • அவர்கள் மற்ற வீட்டு உறுப்பினர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். எந்தவொரு அவசர காலத்திற்கும் தங்கள் அறையை விட்டு வெளியேற நேர்ந்தால், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!