UAE : நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டம் இன்றுடன் நிறைவு..!! நாள் முழுவதும் வெளியே செல்ல தடையில்லை..!! அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டமானது இன்றுடன் (ஜூன் 24, 2020) நிறைவடைவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதாக அமீரக அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், நாடு முழுவதும் எந்த தடையுமின்றி பொதுமக்கள் அமீரகத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து அமீரகம் முழுவதும் தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலும் உள்ள தெருக்கள், பூங்காக்கள் மற்றும் இது போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொது இடங்களும் மெட்ரோ, டாக்ஸி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்குப் பயன்படும் அனைத்து வாகனங்களும் நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு முறையாக சுத்திகரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மூன்று மாதங்கள் கடந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலும் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த இயக்கத் தடை இன்று முதல் முழுவதுமாக நிறைவடைவதாகவும் பொதுமக்கள் இனி எந்தத் தடையுமின்றி வெளியே செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் முடிந்த பின்பு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தேசிய சுத்திகரிப்பு திட்டமானது துபாயில் மட்டும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலும் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நேரங்களில் பொதுமக்கள் மிக அவசிய தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் அவசியமின்றி வெளியே சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Dr. Al Dhaheri: Today we announce the completion of the National Disinfection Program, which covered the country’s public facilities and transportation. However, the public buildings will continue to be regularly disinfected. #UAEGov
— UAEGov (@uaegov) June 24, 2020