கத்தார் : நான்காம் கட்டத்தில் 17 கூடுதல் விமானங்கள்..!! தமிழகத்திற்கு 3 விமானங்கள்..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்லும் நடவடிக்கையின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 17 விமானங்கள் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விமானங்களுடன் சேர்த்து தற்பொழுது கூடுதலாக அறிவிக்கப்பட்ட 17 விமானங்களும் இந்தியாவின் சென்னை, மும்பை, கொச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன.
கூடுதலாக இயக்கப்படவுள்ள விமானங்களில் மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று விமானங்களும் தமிழகத்தில் இருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கத்தாரில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.