வளைகுடா செய்திகள்

இந்தியா, இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து குடியிருப்பாளர்கள் குவைத் வருவதற்கு தடை..!!

குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையானது வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன் மூலம், குவைத் நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குவைத் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல அல்லது மற்ற நாடுகளில் இருந்து குவைத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குவைத் அரசானது இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்ட ஏழு நாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் குவைத் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அடங்கும் என்றும் இந்த நாடுகளை சேர்ந்த குவைத் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டிற்குள் நுழைய முடியாது என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஏழு நாடுகளை தவிர மற்ற நாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் குவைத் நாட்டிற்கு பயணிக்கலாம் என்றும் அவ்வாறு பயணிக்க விரும்புபவர்கள் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!