ஓமானில் குறைந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை..!!
ஓமான் நாட்டில் அரசு துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது தற்பொழுது குறைந்துள்ளதாக ஓமான் நாட்டின் தேசிய புள்ளி விபரங்கள் மற்றும் தகவல் மையம் அறிவித்துள்ளது.
ஓமானின் அரசாங்கத் துறையில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது கடந்த ஜூன் மாதத்தில் 52,462 ஆக இருந்த நிலையில், ஜூலை மாதம் 15.1 சதவீதம் (7,904) குறைந்து 44,558 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விகிதமானது கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில், அரசுத் துறையில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 54, 687 ஆக இருந்தது என்று தேசிய புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் மையம் தெரிவிக்கின்றன.
அரசு துறை மட்டுமல்லாது தனியார் துறையிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் துறையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 1,259,814 பேராக இருந்த நிலையில் ஜூலை இறுதியில் 2.5 சதவீதம் குறைந்து 1,228,713 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதே காலக் கட்டத்தில் ஓமானில் இருக்கும் இந்திய வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது 567,341 இல் இருந்து 542,091 ஆகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தற்பொழுது வரை ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,589,883 இலிருந்து குறைந்து 1542,069ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.