குவைத் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்திய தூதரகத்தின் அறிவுரை..!!
குவைத் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) இந்தியா உட்பட 31 நாடுகளை சேர்ந்த பயணிகள் குவைத் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகமானது தற்பொழுது இந்தியாவில் இருக்கும் குவைத் குடியிருப்பாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
தற்பொழுது குவைத் நாட்டிற்கு வெளியே இருப்பவர்கள் தங்களின் பணி அனுமதி அல்லது வேலை ஒப்பந்தங்களை புதுப்பிக்க, குவைத் மனித வள பொது ஆணையத்தின் அலுவலகத்தை அணுகுவதற்கு தங்களின் முதலாளிகளை கேட்டுக்கொள்ளவும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத் நாட்டிற்கு வெளியே காலாவதியான பாஸ்போர்ட்டைக் கொண்டவர்கள், அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்து, பணி அனுமதி / வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டி புதிய பாஸ்போர்ட்டின் விவரங்களை தங்கள் முதலாளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன், குவைத் நாட்டிற்கு வெளியே இருப்பவர்களும், வேலை அனுமதி / வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் காலாவதியானவர்களும், குவைத் வர விரும்பினால் அவர்கள் புதிய விசாவைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்தியர்கள் குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தின் வலைதள பக்கத்தையோ அல்லது சமூக ஊடக பக்கங்களையோ பின்பற்றுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.