குவைத் : விசிட் விசா, ரெசிடென்சி பெர்மிட் செல்லுபடிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு..!!
குவைத்தின் உள்துறை அமைச்சகம் காலாவதியான விசிட் விசா மற்றும் ரெசிடென்சி பெர்மிட்டின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 1 முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது என குவைத் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விசா நீட்டிப்பானது அமைச்சகத்தின் ஆன்லைன் சேவைகள் வழியாக தானாக செயலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இருக்கக்கூடிய ரெசிடென்சி விவகாரத் துறையில் (Residency Affairs department) மக்கள் அதிகமாக கூடுவதால், கூட்டத்தை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது உள்துறை அமைச்சகம் வழங்கியிருக்கும் விசா நீட்டிப்பானது மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட விசா நீட்டிப்பாகும். இதற்கு முன்னதாக கொரோனாவின் தாக்கத்தினால் மார்ச் முதல் மே வரையிலும் பின்னர் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும் குவைத்தில் இருக்கும் வெளிநாட்டினருக்கு விசா நீட்டிப்பு செய்யப்பட்டது.
இருப்பினும், குவைத் நாட்டின் விசிட் விசாவாக வைத்திருப்பவர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் தங்களின் விசாவினை ரெசிடென்ஸ் விசாவாக மாற்றிக்கொள்ள முடியாது என உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், அந்நாட்டின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் குவைத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தனியார் துறைக்கு மாறுவதற்கான தடையையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.