இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் தொடக்கம்..!!
கொரோனாவின் பாதிப்பினால் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் சிறப்பு விமான சேவைகளை இயக்க குறிப்பிட்ட இரு நாடுகள் ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து குறிப்பிட்ட நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது கத்தார் நாடும் கத்தார் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்கப்படும் நாடுகளில் இணைந்துள்ளது. இது குறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா கத்தார் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகளை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் இந்த ஏற்பாட்டின் படி, இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டிற்கும் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியா மற்றும் கத்தாருக்கு சொந்தமான விமானங்கள் மூலம் விமான சேவைகள் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கத்தாருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்
- கத்தார் நாட்டு குடிமக்கள்
- கத்தார் நாட்டின் செல்லுபடியாகும் விசாவினை வைத்திருக்கும் இந்தியர்கள் (கத்தாருக்கு மட்டுமே பயணிக்க அனுமதி).
மேலும் இந்திய பயணிகள் கத்தாருக்கு பயணிக்க வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர், தாங்கள் வைத்திருக்கும் குறிப்பிட்ட விசா பிரிவில் கத்தாருக்குள் நுழைய இந்திய நாட்டினருக்கு பயணத் தடை இல்லை என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களில் உறுதி செய்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்
- கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்
- கத்தார் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் OCI (Overseas Citizens of India) அட்டைதாரர்கள்
- இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழிகாட்டுதலின் கீழ் எந்தவொரு வகையிலும் இந்திய அரசு வழங்கிய செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்கும் கத்தார் நாட்டு குடிமக்கள்
மேலும், இரு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்கள் வலைத்தளங்கள், பயண முகவர்கள் (Agents) மற்றும் உலகளாவிய விநியோக அமைப்புகள் (global distribution systems) மூலம் இந்தியாவில் இருந்து கத்தாருக்கும் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கும் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுமா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.