வந்தே பாரத் 6 ம் கட்டத்திலும் தொடரும் இந்தியா, அமீரகம் இடையேயான சிறப்பு விமான சேவைகள்..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் வந்தே பரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 31 ம் தேதி வரையில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்ட ‘ஏர் பபுல்’ ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இருந்தும் அமீரகத்திற்கு விமானங்கள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தப்படி, இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு சொந்தமான விமானங்களின் மூலமும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 6 ம் கட்டத்திற்கான விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, தற்பொழுது அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கும் மற்றும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கும் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மூலம் இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ள இந்த திருப்பி அனுப்பும் விமானங்களில் பயணிக்க விரும்புவோர் கண்டிப்பாக இந்திய தூதரகத்தில் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்காக பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இயக்கப்படும் விமானங்களானது அமீரகத்தின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி விமானங்களுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.