செப்டம்பர் 1 க்கு பின்னர் காலாவதியான விசாக்களை புதுப்பிக்காமல் குவைத்தில் தங்கியிருக்கும் 30000 வெளிநாட்டினர்..!!
குவைத்தில் காலாவதியான தங்களின் ரெசிடென்ஸ் விசாக்களை தற்போது வரையிலும் புதிப்பிக்காமல் 30,000 வெளிநாட்டவர்கள் குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கி இருப்பதாக குவைத் நாட்டின் செய்தித்தாள் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பையொட்டி காலாவதியான விசாக்களுக்கு சலுகை காலம் அறிவித்த குவைத் அரசாங்கமானது ஆகஸ்ட் 31 க்குப் பிறகு காலாவதியான விசாவினை வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவினை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும், செப்டம்பர் 1 க்குப் பிறகு காலாவதியான விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் விசா காலாவதியான தேதியில் இருந்து விசாவினை புதுப்பிக்கும் வரை ஒரு நாளைக்கு 2 குவைத் தினார் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் காலாவதியான ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களின் விசாக்கள் தற்பொழுது வரை புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் ஸ்பான்சர்கள் அவர்களின் விசாக்கள் காலாவதியான பின்பும் அதனை புதுப்பிப்பதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று அந்நாட்டின் குடியிருப்பு விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் குவைத்தில் கொரோனா பாதிப்பையொட்டி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலுமான காலகட்டத்தில், காலாவதியான விசா வைத்திருந்தவர்களுக்கு நவம்பர் 30 வரை விசா நீட்டிப்பு செய்யப்படும் என குவைத் அரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.