அமீரக செய்திகள்

அபுதாபியில் தொடர்ந்து ஆறு நாட்கள் தங்குபவர்கள் PCR சோதனை மேற்கொள்வது கட்டாயம்..!! மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருந்தால் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்கள் கொரோனாவிற்கான சோதனையை எளிதில் மேற்கொள்ளும் விதமாக துபாய், அபுதாபி எல்லை பகுதியான கன்தூத் (Ghantooth) பகுதியில் கொரோனாவிற்கான DPI பரிசோதனை மையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அந்த சோதனைக்கு 50 திர்ஹம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அபுதாபிக்கு பயணிக்க வேண்டியவர்கள் PCR அல்லது DPI சோதனை மேற்கொண்டு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருத்தல் அவசியம் என்றும் கூறப்பட்டது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அபுதாபியில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஒவ்வொரு வருகையின் ஆறாவது நாளிலும் கட்டாயம் PCR பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நுழைந்த ஆறாவது நாளில் PCR பரிசோதனையை எடுக்கத் தவறும் நபர்கள் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அபுதாபி ஊடக அலுவலகம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இருப்பினும், கோவிட் -19 மருத்துவ தடுப்பூசி சோதனைகளுக்காக பங்கேற்கும் தன்னார்வலர்கள் இந்த நுழைவு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் தங்களின் பயணத்திற்கு அவசர வாகன பாதைகளைப் (Emergency Vehicle Lane) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அபுதாபியில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு மேல் தங்கினாலும் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!