குவைத் : கோடை காலத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிய இடைவேளை இன்று முதல் நீக்கம்..!!
குவைத் நாட்டில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் விதிக்கப்படும் மதிய நேர இடைவேளையானது இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் சூரியனுக்கு கீழே நேரடியாக அல்லது பொதுவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இடைவேளை வழங்கப்பட்டு அந்நேரங்களில் தொழிலாளர்கள் பணி புரிவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த இடைவேளையானது இன்று (செப்டம்பர் 1) முதல் நீக்கப்பட்டுள்ளதாக குவைத்தின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமைச்சக சட்டம் 535 இன் படி, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரங்களில் சூரியனுக்கு கீழே நேரடியாக பொது வெளியில் வேலை செய்யும் தொழிலார்களுக்கு இடைவேளை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த வருடம் அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட நேரங்களில் வெளியில் வேலை செய்பவர்கள் குறித்த புகார்களைப் பெற ஒரு ஆய்வுக் குழு உருவாக்கப்பட்டது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, மூன்று மாதங்கள் முழுவதும், 503 தொழிலாளர்கள் சூரியனின் கீழ் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்புக்கான தேசிய மையம் கண்டறிந்துள்ளது.
மேலும் ஆய்வுக் குழுவானது தனிநபர்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் விதியை மீறுபவர்கள் குறித்த புகாரையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அவர்களுக்கு மொத்தம் 68 புகார்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்பட்ட மதிய நேர இடைவேளை ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடைந்ததாகவும் இன்று முதல் அவர்கள் மதிய நேரங்களில் பணி புரிவதற்கு தடை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.