UAE : மூன்றாவது நாளாக தொடரும் தீ விபத்து..!! ஷார்ஜாவின் குடியிருப்புக்கு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தடுத்த தீ விபத்துகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தற்பொழுது தொடர்ந்து மூன்றாம் நாளாக அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் இருக்கும் கட்டிடத்தில் திடீரென இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால், இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அல்ஜாஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் ஷார்ஜா சிவில் பாதுகாப்பு மற்றும் ஷார்ஜா போலீசார் ஒன்றிணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கும் அந்த இடத்திலேயே முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், அஜ்மானிலும் துபாய் அல்கூஸ் பகுதியிலும் உள்ள கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தற்பொழுது ஷார்ஜாவில் இருக்கும் குடியிருப்புக்கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.