VBM-6: சவூதியில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு ஆரம்பம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களின் மூலம் இந்தியா செல்ல விரும்பும் நபர்கள் தற்பொழுது விமானங்களுக்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இருக்கும் தமாம் மற்றும் ரியாத் நகரில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் தமிழகத்திற்கு நான்கு விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நான்கு விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் நபர்கள் சவூதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் இந்தியா செல்ல வேண்டி பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதரகத்தில் பதிவு செய்திருக்கும் நபர்கள் நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளம் வழியாகவோ அல்லது பயண முகவர்கள் (Travel Agents) மூலமாகவோ விமானத்திற்கான டிக்கெட்டினை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.