குவைத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளால் காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தானாகவே விசா நீட்டிப்பு செய்யப்பட்டது. சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு நவம்பர் மாத இறுதி வரையிலும் விசா நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பின்னர் காலாவதியான குவைத் ரெசிடென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் இறுதி வரை வழங்கப்பட்டிருக்கும் சலுகை காலம் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கம் இதற்கு முன்னதாக, மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை காலாவதியான ரெசிடென்சி வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் மாதம் வரை சலுகை காலம் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது. கொரோனா தாக்கத்தின் காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது செப்டம்பர் 1 ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் விசா காலாவதியாகி அதனை புதுப்பிக்காமல் இருக்கும் வெளிநாட்டினருக்கு ஒரு நாளைக்கு 2 குவைத் தினார் என்ற அடிப்படையில் அவர்கள் விசாவினை நீட்டிப்பதற்கான விண்ணப்பத்தை ரெசிடென்ஸ் விவகாரங்களுக்கான துறைக்கு சமர்ப்பிக்கும் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாத இறுதியில் இருந்து ரெசிடென்ஸ் விவகாரத்துறையானது விசா நீட்டிப்பு தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு வருவதால், செப்டம்பர் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசாவினை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் விசாவினை புதுப்பிக்காததற்கு கூறப்படும் எவ்வித காரணமும் கருத்தில் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் காலாவதியான விசிட் மற்றும் ரெசிடென்ஸ் விசாவினை வைத்திருப்பவர்களுக்கு நவம்பர் மாதம் வரை சலுகை காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.