அக்டோபர் 1 முதல் ஓமான் திரும்பும் குடியிருப்பாளர்கள் MoFA-விடம் ஒப்புதல் பெற தேவையில்லை என அறிவிப்பு..!!
ஓமானில் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளானது மீண்டும் துவங்கவிருப்பதாக ஓமான் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் அக்டோபர் 1 முதல் ஓமானிற்கு திரும்பி வர அனுமதிக்கபடுவார்கள் என்று உச்சக்குழு அறிவித்துள்ளது.
ஓமானில் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்பொழுது வரை ஓமானிற்கு திரும்புபவர்கள் ஓமானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதன்படியே குடியிருப்பாளர்கள் ஓமான் திரும்பி வருகின்றனர். சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் பின்னர் ஓமானிற்கு வரும் குடியிருப்பாளர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற தேவையில்லை என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஓமானிற்கு வரும் குடியிறுப்பாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.