கொரோனா நோயாளிகளுக்காக விமான நிலையத்தை மருத்துவமனையாக மாற்றும் ஓமான் அரசு..!!
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள பழைய விமான நிலையமானது மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கட்டில் உள்ள பழைய விமான நிலையத்தின் புறப்படும் முனைய கட்டிடத்தை கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் மருத்துவமனையாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக ஓமான் செய்தித்தாள் நிறுவனம் அல் வத்தான் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதாரத் தேவைகளுக்கு இணங்க மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தில் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனாவிற்கான இரண்டாம் கட்ட நிலை நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் இருப்பதால் ஓமானில் உள்ள சுகாதார நிறுவனங்களின் மீதான அழுத்தத்தை எளிதாக்குவதை இந்த மாற்று நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழைய விமான நிலையத்தில் புறப்படும் முனையமானது எதிரில் இருக்கும் பாலத்திலிருந்து எளிதாக அணுகக்கூடியது மற்றும் மஸ்கட் நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும், அவ்விடமானது பல வாகனங்கள் நிறுத்துமிடங்களைக் கொண்டிருப்பதால், ஓமானின் பிற மாகாணங்களிலிருந்தும் நோயாளிகளை அங்கு அழைத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் முந்தைய வாரங்களை ஒப்பிடுகையில், தற்பொழுது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓமானில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.