அமீரக செய்திகள்

UAE: தனது அலட்சியத்தால் 45 பேருக்கு கொரோனாவை பரப்பிய குடியிருப்பாளர்..!! அவரின் செயலால் உறவினர் ஒருவரும் உயிரிழப்பு..!!

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர் ஒருவரின் அலட்சியத்தால் அவரின் உறவினர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

“ஒரு கோவிட்-பாசிட்டிவ் அறிகுறியுடன் இருந்த ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர் கொரோனாவிற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டார். அந்த நபரின் அலட்சியம் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றுநோயை பரப்பியது. கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தும் அவர் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளாமல், கொரோனா வைரஸை தனது மனைவி மற்றும் உறவினர்கள் 44 பேருக்கு பரப்பினார். அவரின் இந்த அலட்சியப்போக்கு அவரது வயதான உறவினரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது” என்று தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஒமர் அல் ஹம்மாடி கூறுகையில், குடியிருப்பாளர்கள் குடும்ப ஒன்று கூடலை தவிர்க்காததால் பெரியளவில் தொற்று பரவியது. “90 வயதுடைய இறந்த அந்த உறவினர் லுகேமியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல மருத்துவ சிக்கல்களை கொண்டிருந்தார். வைரஸ் பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “நமது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் முதலிடம் கொடுப்பது ஒரு தனிநபரின் முக்கிய பொறுப்பாகும். குடும்ப உறுப்பினர்களை ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற குடும்ப ஒன்று கூடல்களை தவிர்க்குமாறு நாங்கள் பொது மக்களுக்கு கடுமையாக அறிவுறுத்துகிறோம்” என்றும் டாக்டர் ஹம்மாடி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!