சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கிய கத்தார் ஏர்வேஸ்..!! முன்பதிவும் தொடக்கம்..!!
இந்தியாவிற்கும் கத்தாரிற்கும் இடையே சமீபத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு விமான நடவடிக்கை குறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகம், கத்தார் மற்றும் இந்தியாவிற்கு இடையே இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளானது வரும் அக்டோபர் 31 ம் தேதி வரையிலும் அல்லது இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் வரையிலும் தொடரும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, கத்தார் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 24 வரை கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிற்கும் இந்தியாவின் 11 நகரங்களுக்கும் இடையே சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முதல் இயக்கப்பட்டுவரும் கத்தார் ஏர்வேஸ் விமானங்களில் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஒரு வழி பயணத்தையோ அல்லது இருவழிப் பயணத்தையோ தேர்வு செய்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று விமான நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்களானது இந்தியாவின் சென்னை, அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, கொச்சி, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் கூறுகையில், “உங்கள் பயணம் முழுவதும், சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரங்களையும், சமீபத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பயணத்தின் போதோ அல்லது எங்கள் அதிநவீன ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலோ எதிர்பார்க்கலாம். பயணிப்பதற்கு முன்னர் அனைத்து பயணிகளும் தாங்கள் செல்லக்கூடிய நாட்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.