சவூதி அரேபியாவில் வரும் அக்டோபர் 4 முதல் உம்ரா செய்ய அனுமதி..!!
சவூதி அரேபியாவில் இடை நிறுத்தப்பட்டிருந்த உம்ரா யாத்திரையானது வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் துவங்கப்படவிருக்கும் உம்ரா யாத்திரையின் முதல் கட்டத்தில், “அக்டோபர் 4 முதல் ஒரு நாளைக்கு சவூதி அரேபியாவில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் 6,000 பேர் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக அக்டோபர் 18 ம் தேதி முதல் 75 சதவீத திறனடிப்படையில் சவூதி அரேபியாவில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களில் 15000 பேர் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பின்னர், நவம்பர் 1 ம் தேதி முதல் நாட்டிற்கு வெளியில் இருந்து உம்ரா செய்வதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அப்போது உம்ரா செய்வதற்கு ஒரு நாளைக்கு 20,000 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் சவூதி அரேபிய அரசானது உம்ராவிற்கு தற்காலிக தடை விதித்திருந்தது. அதே போல் ஹஜ் யாத்திரைக்கும் அந்நாட்டில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.