அமீரகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 3000 ஐ கடந்த கொரோனா வழக்குகள்..!! இன்று மட்டும் 612 பேர் பாதிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்புகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமீரகத்தில் கொரோனா வழக்குகள் பல வாரங்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை மீண்டும் 500 க்கும் மேல் பதிவாகியிருந்த நிலையில், தற்போது இன்று வரையிலும் 500 க்கும் மேலான கொரோனா வழக்குகள் தொடர்ந்து அமீரகத்தில் பதிவாகி வருகின்றது.
கடந்த வாரத்தில் திங்கள்கிழமை 541 வழக்குகளும், செவ்வாய்க்கிழமை 574 வழக்குகளும், புதன்கிழமை 735 வழக்குகளும், வியாழக்கிழமை 614 வழக்குகளும் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை 612 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதனால் அமீரகத்தில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா வழக்குகள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3000 ஐ கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4, 2020) புதிதாக 612 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 72,766 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவிற்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 387 ஆக தொடர்கிறது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 490 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 63,158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.