அமீரகத்தில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அமீரக அரசு ஒப்புதல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டுவந்த கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரகத்தின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 14) அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி சோதைனையின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்ட ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள், இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதையும், வலுவான ஆற்றலை கொண்டிருப்பதையும், கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதையும் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஓவைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “தடுப்பூசியின் பாதுகாப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று முடிவுகள் காட்டுகின்றன” என்றும் சுகாதார அமைச்சர் அல் ஓவைஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸிற்கான தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் நவல் அல்-காபி இது குறித்து விரிவாக பேசுகையில், “ஆறு வார காலப்பகுதியில் 125 நாடுகளைச் சேர்ந்த 31,000 பேர் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றனர், அதேபோன்று நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 தன்னார்வலர்களுக்கும் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் “தடுப்பூசி கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முடிவுகள் ஊக்கமளிக்கின்றன, இருப்பினும் தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தொடரும். தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு பிற தடுப்பூசிகளைப் போலவே லேசான பக்க விளைவுகள் எதிர்பார்த்தபடி வருகின்றன. எனினும் பெரிய ஆபத்தான பக்க விளைவுகள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று அல் காபி தெரிவித்துள்ளார். அத்துடன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1,000 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது, அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் இதுவரையிலும் ஏற்படவில்லை என்றும் அல் காபி குறிப்பிட்டுள்ளார்.