அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிய நேர இடைவேளை இன்றுடன் முடிவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிய நேர ஓய்வு இடைவேளையானது இன்றுடன் (செப்டம்பர் 15) முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம், நேரடியாக சூரியனுக்கு கீழும், திறந்தவெளிகளிலும் செய்யப்படும் வேலைகளை கடந்த ஜூன் மாதம் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான மூன்று மாத காலத்திற்கு வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்து அதன்படி, இந்த மூன்று மாதமும் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரங்களில் திறந்த வெளிகளில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய வருடாந்திர மதிய நேர இடைவேளையானது, நேரடியாக சூரிய ஒளியின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதையும், மூன்று மாதங்களுக்கு வெப்பச் சோர்வு, வெப்ப அழுத்த மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
இதில், தொழில்நுட்ப காரணங்களுக்காக தொடர வேண்டிய வேலைகளுக்கு அதற்குரிய நிறுவனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சாலைகள் கான்க்ரீட் போடுவது, நீர் குழாய்கள், பெட்ரோல் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்க முடியாத திட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் தடைசெய்யப்பட்ட நேரங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள் தொழிலாளர்களின் எண்ணிக்கையின்படி மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தேவைகளுக்கு ஏற்ப குளிர்ச்சியான குடிநீரை வழங்க வேண்டும், அத்துடன் தாகம் தணிக்கும் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் மேலும், பணியிடங்களில் முதலுதவி பெட்டியுடன் சேர்த்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் தடையின் போது பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.