அமீரகத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்புகள்..!! ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக கொரோனா தொற்றானது குறையத் தொடங்கி ஒரு நாளைக்கு 200 பேர், 300 பேர் என பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகளானது அமீரகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதில் இன்று அதிகபட்சமாக 1000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, செப்டம்பர் 12, 2020) புதிதாக 1,007 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 78,849 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 399 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 521 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 68,983 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.