சவூதியில் உம்ராவிற்கு விரைவில் அனுமதி ..!! அந்நாட்டில் வசிக்கும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் உம்ரா மேற்கொள்ளலாம் என தகவல்..!!
சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உம்ரா சேவைகளானது விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் துவங்கப்படவிருக்கும் உம்ராவினை மேற்கொள்ள அந்நாட்டினுள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஆரம்ப கட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று செப்டம்பர் 15 முதல் பயணக் கட்டுப்பாடுகளை ஓரளவு நீக்குவதாகவும், 2021 ஜனவரி 1 முதல் அனைத்து தடைகளையும் மொத்தமாக நீக்குவதாகவும் அறிவித்தது. மேலும், உம்ரா மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையும் கூடிய விரைவில் படிப்படியாக நீக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
உம்ரா பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் சில விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக மருத்துவ சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப உம்ராவுக்கான கதவு திறக்கப்படும். இது தொடர்பான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு வழிபாட்டாளர் மேற்கொள்ளவிருக்கும் உம்ராவிற்கான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் மொபைல் பயன்பாடு (Application) ஒன்றும் உபயோகப்படுத்தப்பட இருப்பதாகவும் இருக்கும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்பவர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, “ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளுக்கான துணை அமைச்சர் டாக்டர் ஹுசைன் அல்-ஷெரீப் ஒகாஸ் அவர்கள் கூறுகையில், “கொரோனா காலத்திலும் ஹஜ் எனும் புனித யாத்திரையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அனுபவத்தை அமைச்சகம் மதிப்பீடு செய்து, அதே போல் விரைவில் துவங்கவிருக்கும் உம்ரா சேவைகளுக்கும் உயர்தர சுகாதார மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இந்த வெற்றிகரமான அனுபவத்தை அமைச்சகம் பயன்படுத்திக் கொள்ளும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.