60 வயதிற்கு மேற்பட்ட 68,000 வெளிநாட்டவர்களின் “வேலை விசாக்கள்” அடுத்த ஆண்டு முதல் நீட்டிக்கப்பட மாட்டாது..!! புதிய சட்டத்தை கொண்டுவரும் குவைத் அரசு..!!
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும், நாட்டு குடிமக்களுக்கும் இடையேயான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை சரிசெய்ய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது குவைத்தில் பணிபுரியும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதி புதுப்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக குவைத் செய்தித்தாள் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருக்கக்கூடிய மனிதவளத்தின் பொது ஆணையம் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்த கல்வி சான்றிதழ்கள் இல்லாதவர்களின் தரவுகளை சேகரித்து அவர்களின் பணி அனுமதிகளை புதுப்பிக்க அடுத்த ஆண்டில் இருந்து தடை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சேகரித்த தரவுகளின் படி மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 68,318 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று மனிதவள பொது அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ ஆதாரம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் தற்பொழுது இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களில் 59 அல்லது 60 வயதுடைய தொழிலாளர்களுக்கு அவர்களின் பணி அனுமதி காலாவதியாகி இருந்தால் அவர்களுக்கு ஒரு வருடம் மட்டுமே பணி அனுமதியை புதுப்பித்துக்கொள்ள அல்லது மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குவைத்தை விட்டு வெளியேறுவதற்கு இந்த ஒரு வருட கால அவகாசம் கொடுப்பதாகவும் குவைத் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, குவைத்தில் இருக்கும் 4.8 மில்லியன் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் மக்கள் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது குவைத் நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீத குவைத் குடிமக்களும் 70 சதவீத வெளிநாட்டினரும் இருப்பதால் அதனை 70 சதவீத குவைத் குடிமக்களாகவும் 30 சதவீத வெளிநாட்டினராகவும் மாற்றுவதற்கு கடந்த சில மாதங்களாக பல திட்டங்கள் குவைத் அரசால் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.