ஐக்கிய அரபு அமீரகத்தின் 49 வது தேசிய தின கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்பட்ட ‘தி சீட்ஸ் ஆப் தி யூனியன் (The seeds of the union)’ திரையில் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியை மேலும் புதிய அனுபவத்துடன் காண பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் யாஸ் தீவு (yas island) மற்றும் சாதியாத் தீவிற்கு (saadiyath island) நடுவே அமைந்திருக்கும் ஜுபைல் தீவின் (jubail island) பசுமையான சதுப்புநில காடுகளுக்கு (Mangrove forest) மத்தியில் புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நகரும் மற்றும் ஒளிரும் கரும்பொருள் திரையில் ‘தி சீட்ஸ் (The seeds)’ என்ற இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ரசிக்க முடியும் எனவும், இந்த புதிய அனுபவம் டிசம்பர் 14 முதல் ஜனவரி 30 வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்றும் அபுதாபி அரசு ஊடக அலுவலகம் இன்று திங்கள்கிழமை தெரிவித்துளளது.
இந்த நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படும் எனவும், மாலை 5 முதல் நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை சுமார் 400 பேர் கடற்கரை பகுதியில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 49 வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தின கொண்டாட்டங்களின் அமைப்புக் குழுவின் உறுப்பினர் கல்பன் அல் மஸ்ரூய் கூறுகையில், ‘தி சீட்ஸ் ’ என்ற இந்த நிகழ்ச்சியானது டிசம்பர் 2 ஆம் தேதி சமூக ஊடங்களிலும் தொலைக்காட்சியிலும் நாம் பார்த்த 49 வது தேசிய தின நிகழ்ச்சியின் மறு இயக்கம் அல்ல, இது அனைவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு புதிய சிறப்பு நிகழ்ச்சி என கூறியுள்ளார்.
‘தி சீட்ஸ் ஆப் தி யூனியன்’ என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக டிசம்பர் 2 ஆம் தேதி நகரும் சதுர வடிவிலான திரையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி டிவி மற்றும் ஆன்லைனில் மில்லியன் கணக்கான மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அமீரகத்தின் வரலாறு மற்றும் தனித்தன்மையை விதையிலிருந்து பூவாக மலரும் பரிமாணத்தை குறிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது புகழ்பெற்ற படைப்பாக்க இயக்குனர் எஸ். டெவ்லின் அவர்களால் அமீரக படைப்பாளிகளின் குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு Dh30 மற்றும் ஏழு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு Dh15 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் டிக்கெட்டை பெறுவதற்கு www.uaenationalday.ae இல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வருமானம் சதுப்பு நிலங்களில் ஒரு பாதுகாப்பு திட்டத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


